Skip to main content

தேசிய விவசாயிகள் தினம்!

டிசம்பர் 23, (இன்று)
தேசிய விவசாயிகள் தினம் !

முன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்த நாளையே 2001 -ம் ஆண்டிலிருந்து விவசாயிகள் தினமாக கொண்டாடப் படுகிறது.

சவுத்ரி சரண் சிங் ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்தார்.

10-க்கு மேற்பட்ட பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் உண்டு.

நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்ததோடு, 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார்.

விவசாயிகளின் நலன்களுக்காக அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வை அறிமுகப்படுத்தியது விவசாயிகள் நலனில் முக்கிய அம்சங்களாகும்.

உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், நூர்பூர் என்ற ஊரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தவர்.

உத்தரபிரதேச அரசில் வேளாண்துறை, வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

உத்தரபிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது.

இந்தியாவில் நெடுநாளைய பிரச்னையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.

ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்பட பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்து வந்தவர். 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இறந்தார்.

புது டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு, வட இந்திய விவசாய சமூகங்களின் அன்பின் காரணமாக 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம், இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்ற போதிலும் இன்றைய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் முதுகெலும்பை உடைப்பதாக உள்ளது.

விவசாயிகள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இன்றைய தினம் வரை டெல்லியில் தொடர்ந்து போராடி வருவது அவர்களுக்கான போராட்டம் என்பதை கடந்து நாம் அனைவருக்குமானது என்பதை உணர்ந்து நம் பங்களிப்பு இருப்பதே நாம் அவர்களுக்கு தெரிவிக்கும் உண்மையான விவசாயிகள் தின வாழ்த்தாகும்.

விவசாயத்தையும் களவாடிட துடிக்கும் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களின் பொருட்களை புறக்கணிப்பதன் வாயிலாக எதிர்கால விவசாயத்தை காப்போம்.

Comments